Skip to main content

‘செஞ்சீ’வன்

கடையேழு வள்ளல்கள் கொங்கு நாட்டினரே என்று நானும் முத்துவும் பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு முல்லைக்குத் தேரீந்த பாரி தான் ஞாபகம் வந்தது. பாரி கொங்குநாடா?

பாரி கடையேழு வள்ளல்களில் இல்லையென்று முத்து சொன்னான். அதியமான் முதலியோரே அந்த வள்ளல்களென்றும். அதியமான் தகடூரை ஆண்டவன் - இது தரும்புரி பக்கம் வருவதென்றாலும் கொங்கு மண்டலத்தையே சாரும் என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அதியமான், தொண்டைமான் சண்டை, அதியமானின் படைக்கலங்கள் குறித்த கதையைப் படித்திருக்கிறேன். ஆனால் அவன் ஏன் வள்ளல் என்று மறந்துவிட்டது. முத்து உடனே அதியமான் ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைக் கொடுத்த கதையை நினைவூட்டினான். 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சீவன் கடைசியாகச் சொன்னான்:
"இவ்வளவு ஏன்? ஔவையாராக நடிச்ச கேபி சுந்தராம்பாள் கூடக் கொங்கு நாடுதான் - அவங்க ஊர் தாராபுரம் பக்கத்துல இருக்கிற கொடுமுடி!"

அப்புறம் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது?

***


ஒருமுறை கோவை ராமநாதபுரத்தில் 'ரேசன்' வாங்க என்னையும் சஞ்சீவனையும் அனுப்பினார்கள். அந்த மாதம் யாருடைய 'ரேசன்' அட்டையையோ கடன்வாங்கியிருந்தாள் பாட்டி. நஞ்சுண்டாபுரம் வழியாகப் போனால் வீட்டிலிருந்து ஆறு கி.மீ. தான். இவ்வழியில் ஒரேயொரு பேருந்தும். அதற்குச் சரியாகத்தான் காசு கொடுத்துவிட்டார்கள். 

அன்றைக்குக் கடையில் சர்க்கரை தவிர எதுவும் இல்லை - நீள்வரிசையில் நிற்காமல் ஐந்து நிமிடங்களில் வேலை முடிந்த களிப்பில் இவனிடம் சொன்னேன் "சஞ்சீவா, இங்கிருந்து நஞ்சுண்டாபுரம் ரொம்பப் பக்கம்; நாம நடந்து போயிரலாம்; அங்கருந்து ரயில் தண்டவாளத்துமேல நடந்துபோனா வீட்டுக்கு இன்னும் பக்கம்; பஸ் காசுக்கு ஏதாவது வாங்கித்திங்கலாம்"

சஞ்சீவன் உடனே ஒப்புக்கொண்டான். சட்டைப் பைநிறைய தேன்மிட்டாயோ எதுவோ வாங்கிக்கொண்டோம். ஒரு கி.மீ. நடப்பதற்குள் சஞ்சீவன் மிட்டாயெல்லாம் தின்றுதீர்த்துவிட்டான். கால் வலிக்கிறதென்று புலம்ப ஆரம்பித்தான். நான் எப்படியெல்லாமோ அவனைச் சமாதானப் படுத்த முயன்றேன்.  ஒன்றும் வேலைக்காகாமல் என் பங்கு மிட்டாயிலிருந்தும் கொஞ்சம் கொடுத்தேன். 

நான் ரஜினி ரசிகன். ஒன்றரை வயது இளையவனான சித்தி மகன் சஞ்சீவன் கமலா ரஜினியா என்ற குழப்பத்தில் இருந்தான். "ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை வச்சா யாரு ஜெயிப்பாங்க?" என்று அவன் எப்போதும் கேட்கும் கேள்விக்கு "கண்டிப்பா ரஜினிதான்" என்ற என் பதிலில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. இதனாலேயே ரஜினியுடன் கமலும் இணைந்து நடித்த பல கற்பனைத் திரைப்படங்களின் கதைகளை (கதை, வசனம், பாடல்கள்(!) எல்லாம் நானே) அவனுக்குச் சொல்லுவேன். கமல் ரஜினியிடம் தரும அடி வாங்கும் காட்சிகளை மிகைப்படுத்திச் சொல்லுவேன். அதில் அவனுக்குச் சந்தேகம் வந்தால் இருவரும் நட்பாயிருந்து ரவுடிகளிடம் இருந்து கமலை ரஜினி காப்பாற்றும் காட்சிகளை வைத்து அவனுக்கு நம்பிக்கையூட்டுவேன். இப்போதும் இந்த மாதிரி கதையில் இலயித்து இன்னும் கொஞ்ச தூரம் நடந்துவிட்டான். அப்புறம் அதுவும் பிடிக்காமல் சாலையோரத்தில் உட்கார்ந்து கொண்டான். அடுத்த பேருந்து வரும்வரை காத்திருந்து அதிலேயே போகலாம் என்று இவன் ஒற்றைக்காலில் நின்றான். இப்படி நடந்து போய் பஸ் காசில் வாங்கித்தின்பது என்னுடைய திட்டம் என்பதாலும்,  என்னவானாலும் மூத்தவனான எனக்கே அடி, திட்டு உறுதி என்பதாலும் எனக்கு வயிற்றில் புளயைக் கரைத்தது.  ஒருவழியாக அவனைப் பேசிச் சரிக்கட்டி மீண்டும் நடக்க வைத்தேன். 

கடைசியில் அவன் சர்க்கரைப் பையினுள் கைவிட்டு ஒரு பிடி சர்க்கரையை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் போட்டு மென்றான். மேலும் இப்படி எடுத்தெடுத்துத் தின்ன ஆரம்பித்தான். இது இன்னும் இரண்டு கி.மீ. தாக்குப்பிடித்தது. அப்புறம் இரயில் தண்டவாளத்தில் நடந்தது, நொய்யலாற்றுப் பாலத்தின் நடுவே இருக்கும்போது திடீரென்று இரயில் வந்து நாங்கள் ஒதுங்கியது போன்ற சாகசங்களில் நேரம் கழிந்து போத்தனூர் கடைவீதி வரை வந்துவிட்டோம். வீட்டுக்கு இன்னும் ஒன்றரை கி.மீ. காணாது. இவன் இதற்குமேல் நடக்க முடியாது என்று அடம் பிடித்தான். வேறு வழியில்லாமல் அங்கிருந்து இன்னொரு பேருந்தில் மிச்சமிருந்த ரேஷன் காசிலிருந்து சீட்டு வாங்கி வீடு வந்து சேர்ந்தோம்.

இரண்டு பேர் பேருந்தேறிப் போய் வந்து, அதிலும் ஒருவழிச் செலவுக்கான காசில் வாங்கித்தின்றது போக ரேஷன் கடையில் வாங்கிய ஒரே பொருள் இரண்டு கிலோ சர்க்கரை.  அதில் அரைக் கிலோ சர்க்கரையை சஞ்சீவன்  தின்று தீர்த்திருந்தான். எல்லாவற்றிற்கும் சேர்த்து நான் பாட்டியிடம் வாங்கிக்கட்டிக்கொண்டேன். 





Comments

Popular posts from this blog

My dream career as a child 

My completion of third grade at primary school was a kind of graduation. For I had to change schools then, as the school I studied - St Francis Anglo Indian School on Trichy Road, Coimbatore - phased out the boys and became a girls-only school. In honor of the last outgoing batch of boys, there was a small ceremony at the school assembly. This is where I got a special mention by the headmistress. I wanted to become a driver of a steam locomotive. Of all the students in my class who were asked about their  career choice, only I and my aspiration were mention-worthy. But I gave up on that dream, and I wonder why. I used to take a steam-locomotive-lugged passenger train to school. The ride lasted about 15 minutes from Podanur to Coimbatore. On my way back from school I boarded the train from its starting point - Coimbatore. Had ample opportunity to gawk at the giant, awe-inspiring machine with its menacing looks and honk, its belly full of burning fire.  Th...